
தனது வரலாற்று இயங்கியலிலிருந்து எமது தமிழீழதேச விடுதலைப் போராட்டமானது முதன்மையான பல செய்திகளை ஒடுக்குமுறைக்கெதிராக விடுதலைவேண்டிப் போராடும் மக்களிற்குச் சொல்லுகிறது. ஒடுக்குண்ட தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் எப்படியெல்லாம் அழித்தொழிக்கப்படும் என்ற பொதுவான செய்தியோடு, தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய அரச பயங்கரவாதம் தனது ஆளும் வர்க்க நலனிற்கான சந்தை விரிவாக்கக் கனவாகிய அகண்ட பாரதக் கொள்கைக்காக அண்டை நாட்டிலுள்ள தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமைக்கான அதாவது இறைமையை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களை எப்படியெல்லாம் அழித்தொழிக்க வல்லது என்பதையும் குறிப்பாக அது தனது “இந்தி- இந்து- இந்தியா” என்ற மாந்த குல எதிர்க் கோட்பாட்டை நிலைநிறுத்தப் பெருந் தடையாக நிற்கும் அதனது வரலாற்றுப் பகையான தொன்மையான தமிழ்த்தேசிய இனத்தை அழிக்க என்னவெல்லாம் செய்யும் என்ற கூடுதல் செய்தியையும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமானது ஒடுக்குறைகட்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடும் உலகளாவிய போராட்ட ஆற்றல்கட்குச் சொல்லுகிறது.
தமிழர்களின் உரிமைக்கான அமைதிவழி அறப் போராட்டங்களானவை தொடர்ச்சியாகச் சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தினால் பன்னாட்டு ஒத்துழைப்புடன் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்படும் போது, ஒடுக்கப்படும் தமிழினத்தின் அடிப்படை உரிமைகளையும் கோரிக்கைகளையும் ஒடுக்குமுறை அரச பயங்கரவாதம் முற்றாக மறுதலித்ததோடு, தமிழினத்தை இனவழிப்புச் செய்வதென கங்கணங்கட்டி இனவெறிகொண்டு செயற்பட்ட போது, அமைதிவழிக் கிளர்ச்சிக்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்ட போது, அமைதிவழி அரசியற் போராட்டங்கள் மறவழி அரசியற் போராட்டமாக உயர்கட்ட வளர்ச்சியடைந்தது. இவ்வாறாக மறவழி அரசியற் போராட்டங்கள் உருவாகியமை அடிப்படையில் புரட்சிகரமானதும் முற்போக்கானதுமே.

தேசிய ஒடுக்குமுறையின் மெய்நிலையை உணர்ந்து கொண்ட அரசியற் தெளிவும் விழிப்பும் பெற்ற இளையோர்கள் தமிழீழ தேசிய இன விடுதலைக்கும், நிகரமை (Socialism) சமூக மாற்றத்திற்கும் மறவழிப் போராட்டமே (Armed Struggle) ஒரேயொரு வழியாக எஞ்சி நின்றதனைப் புரிந்து கொண்டமையால், உருப்படியான செயற்றிட்டமெதுவுமின்றி உணர்ச்சிவயமான வெற்றுக் கூப்பாடுகளைப் போடும் பழைமைவாத தமிழ் அரசியற் கட்சிகளையோ அல்லது தேசிய இன விடுதலையை முதன்மையானதாகக் கொள்ளாத மரபுவழி மார்க்சிய இடதுசாரிக் கட்சிகளையோ தமது தலைமையாக ஏற்காமல் புரட்சிகர விடுதலை அமைப்புகளில் தம்மை இணைத்துக் கொண்டனர். இவ்வழி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குக் கிடைத்த அரும் பெரும் ஆற்றலே திலீபன் என்ற பெயருடன் புரட்சிகர விடுதலைப் போராளியாக, விடுதலைப் புலியாக தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் தலைமையில் புரட்சிக் கடமையாற்றினார்.

மறவழிப் போரை மீயுயர்ந்த அரசியற் போராட்ட வடிவமாகக் கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்- இராணுவ வேலைத் திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகரமாகச் செயலாற்றிய லெப்.கேணல் திலீபன் அவர்கள் தமிழீழதேச விடுதலை என்ற உன்னதமான இலட்சியத்தில் பரந்துபட்ட மக்களைஅணிதிரட்டி, அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசியற் பணியில் அயராது உழைத்து வந்தார். தமிழீழதேச விடுதலை, நிகரமை (Socialism) சமூகப் புரட்சி ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிப்படையான அரசியல் இலக்குகளை அடைவதற்காகப் பல்வேறு நிருவாகக் கட்டமைப்புகளையும் துணை அமைப்புகளையும் தலைவரின் வழிகாட்டுதலில் தனது முயற்சியால் லெப்.கேணல் திலீபன் நிறுவினார்.
ஒரு முதிர்ச்சியடைந்த முதலாளித்துவ உற்பத்திமுறையைக் கொண்டிருக்காததுடன் நிலக்கிழாரிய (நிலப்பிரபுத்துவ) எச்ச சொச்சங்களுடன், சாதி அடிப்படையிலான தொழிற்பிரிவு உறவுகள் என்று ஒரு சிக்கலான சமூக அமைப்பாக இருந்த எமது சமூகத்தில் எமது சமுதாய மேம்பாட்டிற்குச் சாபக்கேடாகவும் அடிப்படை அறத்திற்கும் சமூக நிகரமைக்கும் பெரும் முட்டுக்கட்டையாகவிருந்த சாதியக் கொடுமைகளும், அரச ஒடுக்குறையினாலும் சமூக அடக்குமுறைகளினாலும் (மணக்கொடைக் கொடுமை, ஆணாதிக்கம்) நேரடியாகப் பெண்கள் ஒடுக்குறைக்குள்ளாகுதல் என சமூக அநீதிகளும், மலிந்த ஒடுக்குமுறைகளும், சுரண்டல் முறைகளும் எனப் பல்வேறு ஒடுக்குமுறைகள் எமது சமூகத்தில் நிலவிய காலத்தில், எமது சமூகத்தில் புரையோடியிருந்த அனைத்து வகையிலான ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி ஏற்றத் தாழ்வற்ற நிகரமைச் சமூகத்தைக் கட்டியெழுப்பி மக்களைத் தேச விடுதலைப் போராட்டத்தில் பிரிக்கமுடியாத ஆற்றல்களாக அணி திரட்டுவதைத் தனது புரட்சிகரக் கடமையாகக் கொண்டு பின்வரும் கட்டமைப்புகளை லெப்.கேணல் திலீபன் நிறுவினார்.
- தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம் (SOLT)
- தமிழீழ மகளிர் அமைப்பு
- சுதந்திரப் பறவைகள் அமைப்பு
- தமிழீழ தேசபக்தர் அமைப்பு
- தமிழீழ விழிப்புக் குழுக்கள்
- தமிழீழ கிராமிய நீதிமன்றங்கள்
- சுதேச உற்பத்திக் குழுக்கள்
- தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை
- தமிழர் கலாசார சபை
- தொழிற்சங்கங்கள்
தமிழீழ தேசிய- சமூக விடுதலை என்ற இலட்சியத்தை முனைப்புறச் செய்து துரிதப்படுத்தும் நோக்குடன் மக்களிடத்தில் தமிழ்த்தேசியப் பற்றுணர்வையும் சமூக வாஞ்சையையும் தட்டி எழுப்பி, அதனை மேலும் வளர்த்தெடுத்து, தமிழீழதேச விடுதலைப் போராட்டத்தில் மக்களை நேரடிப் பங்காளர்களாக மாற்றும் நோக்குடனே இவ்வமைப்புகள் லெப்.கேணல் திலீபனின் முயற்சியில் நிறுவப்பட்டன.
இப்படி அமைதிவழி அறப்போராட்டங்கள் மறவழி அரசியற் போராட்டமாக முற்போக்கான புரட்சிகரமான மாற்றமாக மாறுதலடைந்த பின்னர் ஈகி திலீபன் என்ற பேராற்றல்மிக்க புரட்சிகரப் போராளி 265 மணி நேரங்களாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது தனது வயிற்றிலே போராட்டத்தைத் தொடங்கி தமிழீழ மக்கள் கண்முன்னே பார்த்திருக்க அணுவணுவாக உருகித் துடி துடித்து ஈகச் செம்மல் ஆனமை அதன் உண்மைப் பொருளில் அது அமைதிவழிப் போராகிவிடாது; அது மறவழி அரசியற் போரிற்கான அறைகூவலே.
இந்தியா பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் தம்மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் போரின் விளைவாக வந்த சமஸ்கிருதமயப்பட்டு இந்துவியமயமாகி விட்ட தமது வழிபாட்டு முறையின் விளைவினால் விளைந்த இந்தியா “புனித பூமி” என்ற சிந்தனையும் (தமது சாம்பலைக் காசியில் கரைக்கத் துடிப்பதைப் பெரும் பேறென்றெண்ணும் மனநிலை) “அகிம்சை”க்கு இலக்கணமான மிகப் பெரிய ஒப்புரவு நாடாக இந்தியாவைப் பார்த்துப் புளகாங்கிதமடையும் எம்மவர்களின் அறியாமை என எமது சமூகம் இருந்த காலத்தில், தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய அரச பயங்கரவாதத்தின் “அகிம்சை” என்ற போலி முகத்திரையைக் கிழித்தெறிந்து உலகெங்கிலுமுள்ள தமிழர்களை விழிப்புப்பெறச் செய்ய மிக வலுவான போரியல் உத்தியாகவே லெப்.கேணல் திலீபன் ஒரு சொட்டு நீரும் அருந்தாத உண்ணா நோன்பைக் கையிலெடுத்தார். அவர் அந்த நேரத்தில் தேர்ந்தெடுத்த இந்த உத்தி ஆயிரம் கனரகப் போர்க்கருவிகளின் வலுவினை ஒத்தது. இது பல்லாயிரக் கணக்கான இளையோர்களை மறவழிப் போரில் இணையத் தூண்டியதோடு மறவழித் தமிழீழ விடுதலைப் போராட்டம் மக்கள்மயப்பட்டு விட வழிகோலியது. இது இந்தியா பற்றிய அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த எமது மக்களுக்கு இந்திய அரச பயங்கரவாதத்தினையும் நாம் எதிர்த்துப் போராடினாலேயே தமிழீழத் தனியரசைக்க இயலும் என்ற தெளிவை ஏற்படுத்தியது. அத்துடன், எமது தமிழீழதேச விடுதலைப் போராட்டத்தை இன்னும் முன்னோக்கி நகரச் செய்து வல்லாதிக்க எதிர்ப்பையும் எமது விடுதலைப் போராட்ட வேலைத் திட்டத்தின் செயற்திட்டத்தில் இடம்பெறச் செய்து எமது விடுதலைப் பயணத்தை மேலும் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதுமாக்கியது.
வரலாற்றுப் புகழ்மிக்க அவரது இறுதி உரையில் “அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்து சமதர்ம சோசலிச தமிழீழம் படைப்போம்”, “மக்களே எப்பொழுதும் விழிப்பாக இருங்கள்”, “எமக்கு ஒரு தெளிவான தலைவர் கிடைத்திருக்கிறார்”, “மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று புரட்சிகரமாக மக்கள் முன்னிலையில் உரையாற்றினார் லெப்.கேணல் திலீபன் அவர்கள்.

ஆம். அனைத்து அடக்குமுறைகள் என்னும் போது சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறையுடன் தமிழர்களின் மீதான இந்திய அரச பயங்கரவாத ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, சமூக ஏற்றத் தாழ்வுகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை என அனைத்து விதமான ஒடுக்குறைகளையும் உடைத்தெறிந்து நிகரமைத் தமிழீழம் படைப்பதையே அவர் தனது கடைசி உரையில் உறுதியாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமது நேரடி எதிரியான சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தெரிந்து வைத்திருக்கும் எமது மக்கள் இந்திய அரச பயங்கரவாதம் உட்பட்ட இனக்கொல்லிகள் குறித்துத் தெளிவடையாமல் இருப்பது தேன் தடவிக் கொடுக்கப்படும் நஞ்சினைக் கேட்டுப் பெற்று உவகையுடன் உண்டு நாசமாய் மடிந்து போவதாகிவிடும் என்பதாலே தமிழீழ மக்களை எப்பொழுதும் விழிப்பாக இருங்கள் என்று லெப்.கேணல் திலீபன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். தமிழீழ விடுதலையை தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒருபோதும் ஏற்காது என்பதால் இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்துப் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை எனத் தெளிவுடனும் நெஞ்சுரத்துடனும் சிந்தித்த தலைவர் எமக்குக் கிடைத்திருக்கிறார் என்பதனால் எமக்குத் தெளிவான தலைவர் கிடைத்திருக்கிறார் என்று அவர் மக்கள் முன் ஆற்றிய இறுதியுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் அரசியல் விழிப்புப் பெற்று புரட்சிகர ஆற்றல்களாக அணிதிரண்டு போராடினால் மட்டுமே அத்தனை ஒடுக்குறைகளையும் உடைத்தெறிந்து சுதந்திர தமிழீழம் படைக்க முடியுமென்ற அறுதியும் இறுதியுமான மெய்நிலையையே அவர் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று கூறி மக்கள்மயப்பட்ட போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். தன்னை ஆகுதியாக்கி இந்தியா என்ற கொடிய அரக்கனின் “அகிம்சை” என்ற முகத்திரையைக் கிழித்தெறிந்து அதன் கோர முகத்தை துலாம்பரமாகக் காட்டிய லெப்.கேணல் திலீபன் தமிழீழ விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே என்ற தெளிவான செய்தியை மக்களிடத்தில் உய்த்துணரச் செய்து தமிழீழ விடுதலைக்கான வழித்தடத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான மீதி வழியை எமக்கு உணர்த்திக் காட்டியிருக்கிறார். எனவே, அனைத்து விதமான ஒடுக்குறைகளிலிருந்தும் விடுதலை அடைவதற்கான வேலைத்திட்டத்தைக் கொண்டிராமல் தமிழின விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்வோரும் இந்திய அரச பயங்கரவாதத்தை நக்கிப் பிழைத்து இறைஞ்சி மன்றாடித் தமிழீழ விடுதலையை அடையலாமென்று விடுதலைக்குக் குறுக்கு வழி காட்டுவதாகச் சொல்லி தமது பிழைப்புவாதத்திற்காக ஒட்டுமொத்த தமிழின விடுதலைக்கும் குழிபறிப்பவர்களுமே ஈகி லெப்.கேணல் திலீபனின் ஈகத்தைக் கேவலப்படுத்தும் ஈனப் பிறவிகள்.
கூடவே இருந்து ஈகி திலீபனின் சொற்களில் வடிக்க முடியாத ஈகத்தை நேரில் பார்த்துக் கவிவடித்து ஒட்டுமொத்த தமிழர்களின் கண்களிலும் செந்நீரை வரவழைத்த அன்றைய உணர்ச்சிக் கவிஞரும் இன்றைய நாள் இந்தியாவை நக்கிப் பிழைக்கும் நயவஞ்சக முடிவை எடுத்து பிழைப்புவாதியாகி விட்ட காசி(வி)யானந்தன் வகையறாக்களிலிருந்தும் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் இதுவென ஈகி லெப்.கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள்களில் தெளிவு பெறுவோம். ஆம் ,தமிழ் மக்கள் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று ஈகி திலீபன் அன்றே எச்சரித்து விட்டார். லெப்.கேணல் திலீபன் கூறிச் சென்ற, விதைத்துச் சென்ற, உணர்த்திச் சென்ற எல்லாவற்றையும் மனங்கொண்டு நாம் சொல்லுகிறோம் “ஈகி லெப்.கேணல் திலீபனின் ஈகம் சொல்லும் செய்தியே தமிழீழ விடுதலைக்கான கருத்தியற் திறவுகோல்”
–அருள்வேந்தன்-
2017-09-18
Be the first to comment