பொருத்து வீடுகளும் அரசின் பொருந்தாக் கொள்கையும் – துலாத்தன்

இந்தப் பொருத்துவீடு தொடர்பான கருத்தியலானது சிறிலங்காவில் 2007 காலப்பகுதியில் தீவிரமாக ஆராயப்பட்டது. இராணுவத்தால் வன்கவரப்படும் தமிழர் தாயகப்பகுதிகளில் “தற்காலிக இராணுவக் குடியிருப்புகளை” வேகமாக உருவாக்குவதற்காக “டியுரா” (Dura) பலகைகளிலான பொருத்துவீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் இலங்கையில் தற்போது டியுரா வகைப் பலகைகள் உட்புறச் சுவர்களுக்கு மாத்திரமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இனவ‌ழிப்புப் போருக்குப் பின்னர், மீள்குடியேற்றம் மற்றும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்வை நிலையாக்குவதில், சிறிலங்கா அரசானது தனது சூழ்ச்சியான‌ அரசியலைத் தமிழர்கள் மேல் திணித்து வருகிறது.

சிறிலங்கா அரசின் இந்தச் சூழ்ச்சியான‌ காய்நகர்த்தல்களில் கவனிக்கப்பட வேண்டியவை:

  • சிறிலங்கா அரச படைகளின் வன்கவர்வினால் அழிக்கப்பட்ட தமிழர்களின் உடைமை விபரங்கள் பற்றி எந்தவொரு கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை.
  • சிறிலங்கா அரச படைகளின் வன்கவர்வால் அழிக்கப்பட்ட தமிழர்களுக்கே உரித்தான பொதுவான உடைமைகள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
  • தமிழர்களின் உயிரிழப்புகள் குறித்துச் சரியான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது மாத்திரமன்றி, அது பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் சிறிலங்கா அரசு இசைவளிக்கவில்லை.

இப்படியான இறுக்கமான‌ பிடிக்குள் தமிழர்களின் வாழ்வை வைத்துக் கொண்டு, அபிவிருத்தி என்ற பெயரில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழர் நிலப்பகுதியில் நீண்டகால நோக்கில் அழிப்பை மேற்கொண்டுவருகிறது சிறிலங்கா அரசு.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாழ்வியலுக்குச் சற்றும் பொருந்தாத பொருத்துவீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசு விடாப்பிடியாக நிற்பதற்குப் பின்னால் நயவஞ்சகமான பல அரசியல் காரணங்கள் காணப்படுகின்றன.

தவிர ;

  1. பொருத்துவீட்டிற்கு 30 ஆண்டுகால உத்தரவாதம் மாத்திரமே வழங்கப்படுகின்றன. அதவாவது 30 ஆண்டுகளின் பின்னர் அந்த வீடுகளுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. புதிய வீடு அமைக்க வேண்டும் அல்லது பொருத்துவீட்டைத் திருத்த வேண்டும். இரண்டிற்குமே தமிழர்கள் சிறிலங்கா அரசில் தங்கியிருக்க வேண்டி ஏற்படும்.
  2. எரிவாயு சமையல் அறைகள்தான் காணப்படும் –

அதாவது பொருத்துவீட்டில் விறகு அடுப்புகள் பயன்படுத்த முடியாது. பொருத்துவீடு பெறும் பயனாளிகள் அனைவரும் சமயல் எரிவாயுவையே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறது அரசு. சமையல் எரிவாயு பன்படுத்தக் கூடிய வருவாய் இருப்பவர்களுக்கா அரசு பொருத்து வீடு வழங்கும் என்ற கேலிக்குள்ளாகும் கேள்விக்கு அப்பால், பொருத்துவீடானது நெருப்பின் புகையையால் பாதிப்படையக் கூடியது என்ற முடிவிற்கு வரலாம். பண்டிகைக் காலங்களில் கூட விறகு அடுப்புப் பயன்படுத்த முடியாது என்ற நிலை காணப்படுகிறது.

தமிழர்களின் வாழ்வை எப்படித் தமது பிடிக்குள் வைத்திருக்க சிறிலங்கா அரசு முயற்சிக்கிறது:

  • பொருத்துவீடானது பொதுவானதல்லாத குறிப்பிட்ட‌ மூலப் பொருட்களால் (Special Materials) குறிப்பிட்ட‌ கட்டுமான முறை மூலம் (Special Construction Method) கட்டப்படுகிறது. தவிர 30 ஆண்டுகால‌ உத்தரவாதமும் (Warranty) வழங்கப்படுவதால் உத்தரவாதம் வழங்கப்பட்ட 30 ஆண்டு காலப்பகுதிக்குள், ஏதாவது திருத்த வேலைகள் செய்வதென்றால் சிறிலங்கா அரசினால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனத்தால் மாத்திரமே திருத்த வேலைகள் செய்ய முடியும். குறித்த நிறுவனத்தில் மாத்திரமே அதற்கான மூலப் பொருட்களை வாங்க முடியும்.
  • இந்தப் பொருத்துவீட்டின் நீண்டகாலப் பயன்பாடானது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று என்பதால், தமிழர்களுக்கான தனி அரசு உருவாகத நிலையில், எதிர்காலத்தில் தமிழினத்தின் அடுத்த தலைமுறை மீண்டும் வீடுகேட்டு சிங்கள அரசிடமே கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அப்போது மீண்டும் சிறிலங்கா அரசானது தமிழினத்தின் மீது தனது கேவலமான அரசியல் ஆதிக்கத்தை மேற்கொள்ள‌ முடியும்.

பொருத்துவீட்டை ஏற்க மறுப்பதற்கான‌ தொழினுட்பக் காரணங்கள்  (Technical Reasons) 

  • இந்த வீடானது வலுவான‌ அத்திவாரத்தின் மீது எழுப்பப்படவில்லை. மண்ணின் தன்மை அறிந்து அத்திவாரத்தின் தன்மை பரிந்துரைக்கப்படல் வேண்டும்.
  • ஆயிரக்கணக்கான வீடுகள் மிகக் குறைந்த காலப்பகுதியில் கட்டப்பட இருப்பதால், கட்டுமான நிறுவனமானது தனது இலாபத்திற்காகத் தரமற்ற பொருள்களைக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றன (Quality Control). ஒவ்வொரு வீட்டினதும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களின் தரம் குறித்து மதிப்பீடு செய்வது வாய்ப்ப‌ற்றதாகக் கூட இருக்கலாம். அதனால் இந்த வீடுகள் விரைவில் சேதமடைவற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படுவதால், எல்லாப் பொருத்துவீடுகளினதும் முதன்மையான‌ மூலப்பொருள்களின் தீப்பிடிக்கும் தன்மை, ஈரலிப்புத்தன்மை (Fire certificates, Moisture certificates) குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமா என்பது ஐயத்திற்கிடமானதே. (சிறிலங்காவின் கட்டுமானத் துறை என்பது பாரிய அளவிலான ஊழல் நடைபெறும் துறை என்பது குறிப்பிடத்தக்கது)
  • ஒரு பொருத்து வீடு கட்டுவதற்கான செலவு ஏறத்தாழ 21 லட்சங்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது (வீட்டுத் தளபாடங்களையும் சேர்த்து). ஆனால் அதே அளவிலான (550 சதுர அடிகள்) கல்வீடு ஒன்றைக் கட்டுவதற்கான செலவு 10 லட்சங்களுக்குள் (தளபாடங்கள் இல்லாமல்) எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.  கல்வீட்டின் செலவானது குறைவாக இருப்பது மட்டுமன்றி ஆயுளும் அதிகமானது. தவிர வீட்டைத் திருத்துவதற்குக் கூட அரசினை நம்பியிருக்கவும் தேவையில்லை; செலவும் குறைவு. 

விடாப்பிடியாக நிற்கும் சிறிலங்கா அரசு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாகப் பொருத்துவீட்டை ஏற்க மறுத்துவிட்டது. தவிர, பொருத்துவீடு வேண்டாம் என்று கிளிநொச்சியில் பாரிய அளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் மக்களால் நடத்தப்பட்டது. ஆனாலும் சிறிலங்கா அரசு பொருத்துவீட்டைப் பற்றிக் கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்தித்தாள்களில் வெளியிட்டு வருகிறது.

கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, பொருத்து வீட்டிற்கான மக்களின் விண்ணப்ப‌ங்களைக் கோரியிருக்கிறது சிறிலங்கா அரசு.

இந்தச் செயற்பாடானது மக்களின் எண்ணங்கள் குறித்து நாடிபிடிக்கும் செயற்பாடாக கூட இருக்கலாம்.

எது எப்படியோ பொருத்துவீடானது இந்த மண்ணிற்குப் பொருந்தாத ஒன்று என்பதை மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருத்தல் இன்றியமையாதது.

துலாத்தன்

30-12-2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*