
“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவிற்கு வருகிறது.
“யாழ்ப்பாணத்தில இருக்கிற இந்தியத் துணைத்தூதர் நடராஜன் செத்தவீடுகள் ஏன் சாமத்தியவீடுகளுக்கும் அழையா விருந்தாளியா வந்திர்றான்.. என்ன அழிவுக்கோ தெரியல!!” என்று யாழ்ப்பாணத்தில் புலம்பல்கள் கிளம்பியிருக்கும் நிலையில் இந்தக் கட்டுரையைப் பதிவு செய்கிறோம்.
இலங்கைத்தீவில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் பன்னாட்டு உளவு அமைப்புகளும் தத்தமது செயற்பாடுகளை விரிவாக்கம் செய்துவருகின்றனர். தமிழர் தாயகத்தில் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை நடுவப்படுத்தி வெவ்வேறு வேலைத்திட்டங்களோடு உளவு அமைப்புகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டமான யாழ்ப்பாணம் இந்த உளவு அமைப்புகளின் முதன்மையான தளமாகக் காணப்படுகிறது.
சிறிலங்கா அரசானது மேற்குலக மற்றும் சீனச்சார்பு நிலைப்பாடுகளை எடுக்கும் போதெல்லாம் இந்திய அரசானது சிறிலங்கா அரசை மிரட்டும் பல வேலைகளைச் செய்திருக்கிறது. 2002 காலப்பகுதியில் ரணில் அரசாங்கமானது விடுதலைப்புலிகளோடு போர்நிறுத்த உடன்படிக்கை செய்தது மாத்திரமின்றிப் பல பாதுகாப்பு உடன்பாடுகளை அமெரிக்கா மற்றும் மேற்குலகு நாடுகளுடன் மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்து அந்த நேரத்தில் சிறிலங்காவின் சனாதிபதியாக இருந்த சந்திரிகாவினூடாக ரணிலின் அமைச்சைப் பறித்ததோடு மாத்திரமின்றி அமைதி நடவடிக்கைகளையும் இந்தியா குழப்பியமை யாவரும் அறிந்த ஒன்றே.
இனச்சிக்கல் விடயத்தில் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்துவிடக்கூடாது என்றும் அப்படி தீர்வு கிடைத்துவிட்டால் சிங்களதேசத்தைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சமும் இந்தியத் தரப்பில் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
தமிழர் சிக்கலில் இந்தியாவைப் பின்வரும் தளங்களில் வைத்து நோக்கில் விளங்கிக் கொள்ள முடியும்.
அ. வலுவான அரசியல் தலைமையொன்று தமிழர்களிடத்தில் இருப்பதை அல்லது உருவாகுவதை இந்தியா விரும்பவில்லை.
ஆ. வலுவான அரசியல் தலைமை தமிழர்களிடத்தில் உருவாகினால் என்ன நடக்கும்?
இ. வலுவான அரசியல் தலைமை தமிழர்களிடத்தில் உருவாகாமல் இருக்க இந்தியா என்ன செய்கிறது?

உலகின் கடல் வணிகத்தின் பெரும்பகுதியானது இந்து சமுத்திரத்தினூடாகத்தான் (தமிழர் மாகடல்) நடக்கிறது. இந்து சமுத்திரத்தில் நடக்கும் கடல் வணிகத்தின் பெரும்பகுதியானது தமிழரின் கடற்பரப்பில் தான் நடக்கிறது. ஆனால் அந்த வணிகங்களில் எவையுமே தமிழர்களினுடையது அல்ல. தமிழர்களின் கடலில் நடக்கும் வணிகத்தால் தமிழர்களின் பொருண்மியத்தில் எந்வொரு மாற்றமும் ஏற்படவில்லை. தமிழகத்திலும் தமிழீழத்திலும் வலுவான தமிழர் அரசுகள் உருவானால் இந்து சமுத்திரத்தின் கடல் வணிகத்தின் பெரும்பகுதி தமிழர் கட்டுப்பாட்டில் வரும். இன்று பன்னாட்டு அரசியலானது பன்னாட்டுச் சந்தையை நடுவப்படுத்தியே நிகழ்ந்து வருகிறது.
தமிழகத்தின் அரசியற் தலைமையைானது தமிழர்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு நூற்றாண்டாகப்போகிறது. அங்கு தமிழ்த் தேசிய அரசியல் உருவாகும் வாய்ப்புகள் குறித்து எந்தவொரு சமிஞ்சையும் தெரியவில்லை. ஆனால் தமிழீழத்தை மீட்டெடுக்கக் கடந்த நூற்றாண்டு தொடங்கப்பட்ட போராட்டமானது இன்னமும் அதன் தாகத்தில் இருந்து சற்றும் குறையாதிருப்பதால் அதை அடியோடு அழித்துவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா தீவிரமாக இருக்கிறது.
தமிழ்நாட்டை அரசியலாகச் சிதைத்தது போல் தமிழீழத்தையும் கூறுபோட்டால் தமிழ்த்தேசியமானது வலுவாக உருவாகும் வாய்ப்பை அடியோடு அழித்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறது இந்தியா.
தமிழீழ மண் நாற்பது ஆண்டுகளாகத் தமிழீழம் என்ற ஒற்றை நோக்கில் தமிழ்த் தேசிய ஆன்மாவை நெஞ்சில் தாங்கி போராடி வருகின்றது. எனவே தமிழீழத்தை வென்றெடுக்கவல்ல தமிழ்த் தேசியக் கருத்தியலை மடைமாற்றம் செய்யவும் சிதைத்தழிக்கவும் இந்திய உளவுத் துறையானது, தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை முனைப்புறாமல் தடுக்கத் தான் கையாண்ட கருத்தியற் பேதமைகளை தமிழீழத்தில் இறக்குமதி செய்து தமிழீழத்தில் தனது நரிவலையை விரிக்கிறது. குருதியையும் சதையையும் உயிரையும் கொடுத்துத் தமிழீழத்தை மீட்கப் போராடிக் கொண்டிருக்கும் இனத்தை இயலுமானவரை எல்லா வழிகளாலும் திசை திருப்பவும் தமிழீழம் என்பது வாய்ப்பற்றதொன்று என விசமத்தைப் பரப்பவும் இந்தியா தீவிரமாக வேலை செய்கிறது. சாதியற்ற மதச்சார்பற்ற தமிழீழத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் மக்களிடத்தில் சாதியத்தையும் இந்தியச் சாதிய தலைவர்களையும் வலிந்து அறிமுகப்படுத்துகிறது. இலக்கியம் என்ற போர்வையில் சாதிய எழுத்துகள் மற்றும் கூசிழிவான (ஆபாச) எழுத்துகளை தமிழீழ மக்களிடத்தில் ஊடுருவ விடுகிறது. இந்த எழுத்துகளுக்காகப் பாரிய அளவில் பணத்தையும் வேறு சில உதவிகளையும் இந்தியா செய்துவருகிறது.
இலக்காகிப் போன யாழ்ப்பாணம்!
தமிழர் தாயகத்தில் அதிக தமிழ் மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் திகழ்கிறது. இந்தியாவிற்காக வடமாகாணத்தின் அரசியல் நகரமாகவும் யாழ்ப்பாணத்தை வடிவமைத்து கொடுத்திருக்கிறது சிறிலங்கா அரசு. (வடமாகாண சபையின் நிருவாகமானது மாங்குளத்தில் இயங்கியிருக்க வேண்டும்)
தவிர யாழ்ப்பாணமானது ஏதோ ஒரு வகையில் மற்றைய தமிழ் மாவட்டகளுடன் நேரடியான தொடர்பில் இருப்பதால் யாழ்ப்பாணத்தில் இருந்தபடியே மற்றைய மாவட்டங்களிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரகத்தைத் திறந்த இந்தியா தனது உளவுப் பிரிவுகளைப் பல தளங்களில் வேலை செய்ய விட்டிருக்கிறது.
தமது தொன்ம வழிபாட்டு முறைகளிலிருந்து நயவஞ்சகமாக இடைச்செருகல் செய்யப்பட்ட இந்துத்துவ வடுகப் பிராமண மடைமைகளைப் பிரித்தறிவதில் ஈழத்தமிழர்களிடத்தில் நிலவும் சிந்தை வரட்சியைத் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துகிறது இந்திய உளவுத்துறை. யாழ்ப்பாணத்தில் ஏராளமான சாமியார் மடங்கள் என்றுமில்லாத அளவிற்கு இன்று முழு வீச்சுடன் செயற்படுகின்றன. சாயிபாபா, அம்மா பகவான், பிரம்மகுமாரிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக வேலை செய்வதுடன் யாழ்ப்பாண – இந்தியா சுற்றுலாக்களையும் ஒழுங்கு செய்து ஊக்குவிக்கின்றன.
கிறிஸ்தவ அமைப்புகளின் (பெந்திக்கொஸ்தே, ஜெகோவாவின் சாட்சியங்கள் போன்ற பல அமைப்புகள்) தளங்களானவை இஸ்ரேலின் பின்னணியில் இயக்கப்படுவது போல (உளவு வேலைகளுக்காக யூதர்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ அமைப்புக்கள்), RSS கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா இந்து சாமியார் மடங்களும் இந்திய உளவுத்துறைக்கு வேலை செய்யும் அமைப்புகளே. யாழ்ப்பாணத்தை நடுவப்படுத்தி இயங்கும் பெரும்பாலான இந்துச் சாமியார் அமைப்புகள் மலையாளிகளின் தலைமையில் இயங்குகின்றன.
யாழ்மாவட்டத்தில் எத்தனை குடும்பங்கள் இருக்கின்றன என்பது முதல் எத்தனை தமிழ் கைம்பெண்கள் இருக்கிறார்கள்? எத்தனை போராளி மாவீரர் குடும்பங்கள் இருக்கின்றன? வீடுகளற்ற குடும்பங்கள் எத்தனை? வருவாய் வழிகள் என்ன? ஈழத்தமிழர்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தக் கூடிய வாய்ப்புகள் எவை? இளைஞயோர்கள் அதிக நாட்டம் செலுத்துவது எதில்? என்பது உள்ளிட்ட அடிப்படை உளவியற் தரவுகளைச் சேகரிக்கும் இந்த அமைப்புகள் அதன் மூலம் தமது வேலைத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்கின்றனர்.
இந்திய துணைத்தூதரகத்தின் வருகைக்கு பின்னர்……….
மகிந்தராஜபக்ச, மன்மோகன் சிங் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட இந்தியத் துணைத்தூதரகமானது புலம்பெயர்ந்த புலி எதிர்பாளர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் அடையாளங் காணப்பட்ட சில இளம் எழுத்தார்வம் மிக்கவர்களைத் தமிழ்த்தேசிய எதிர்ப்புணர்வு மற்றும் கூசிழிவு (ஆபாச) எழுத்துகளை எழுதும் படியாக ஊக்குவித்து வருகிறது.
ஈழத் தமிழர்களுக்குத் தொடர்பேயில்லாத, பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாத வடுகருக்குமிடையிலான அதிகாரப் போட்டியில், பார்ப்பனரல்லாத வடுகர் அரசியல் அதிகாரத்தை மீட்க வாய்ப்பாக வடுகரான ராமசாமி நாயக்கர் செய்த அரசியலானது தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளைத் துடைத்தழிக்கும் தன்மையினதாய் இருந்தது. தமிழ்த் தேசியத்தைத் தமிழ்நாட்டு மண்ணின் மக்களால் கட்டியமைக்க முடியாமல் பார்ப்பனர் எதிர்ப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தில் வடுகருக்கு வாய்ப்பான அரசியலைச் செய்த பெரியார் என்ற இராமசாமி நாயக்கரையும். அம்பேத்கர் போன்றோரையும் யாழில் கொண்டாடத் தூண்டுகிறது இந்திய உளவுத்துறை. பெரியார், திராவிடம் என்ற பெயரில் செய்தித்தாள்கள் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழீழத்தில் எல்லோருமே தமிழர்கள் மட்டும்தான். தலித்துகளென்றும் இன்னும் வெவ்வேறு சாதியப் பெருமைகளையும் தமிழீழத்திற்குள் இலக்கியமென்ற பெயரில் திணிப்புச் செய்கிறது இந்திய உளவுத்துறை. தமிழீழத்தில் “தலித்” என்ற சொல்லை எழுத்துகள் மூலம் திணிப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் இந்திய சிறிலங்கா அரச உளவுத்துறையின் ஒத்தோடிகள் என்றே பொருள் கொள்ளல் வேண்டும்.

இந்திய துணைத்தூதர் நடராஜன் யாழ்ப்பாணத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடிய போது
ஈழத் தமிழர்களுக்குத் தொடர்பேயில்லாத ஹோலிப் பண்டிகை போன்றவை மாவீரர்களின் நினைவு நாள்களில் யாழ்ப்பாணத்தில் திணிக்கப்பட்டுவருகிறது. RSS இன் கட்டுப்பாட்டில் இருக்கும் சாமியார் அமைப்பொன்றின் தலைவராக இருக்கும் “அமிர்தநந்த மாயி” என்கிற மலையாளி “ஈழத் தமிழ் கைம்பெண்களுக்கு “மசாச்” பயிற்சி நெறி வழங்கி அவர்களை “மசாச்” செய்யும் தொழிலுக்கு ஊக்குவிக்க வேண்டும்” என்று கூட்டமொன்றில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியத் துணைத்தூதரகம் யாழ்ப்பாணத்தில் வைத்து கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு விருது கொடுக்கிறது. சிலரை டெல்லிக்கு அழைத்து விருது கொடுக்கிறது. இலவயத் திரைப்பட வெளியீட்டு விழாக்களை ஒழுங்கு செய்கிறது. இந்த விழாக்களுக்கு இலவய நுழைவுச் சீட்டுக்களைப் பெறுவதற்கு பெயர், முகவரி, அடயாள அட்டை இலக்கம் என எல்லாத் தரவுகளையும் கேட்கிறது. ஒரு திரைப்படம் பார்ப்பதற்கு இத்தனை தரவுகள் தேவையா எனச் சிந்திக்க வேண்டும்.
எந்தவொரு நகரத்திட்டமிடலுமின்றி யாழ்ப்பாண நூலகத்திற்கு அருகில் 2 பில்லியன் இலங்கை ரூபாய்கள் செலவில் இந்தியாவால் கட்டப்படும் கலாச்சார மண்டபத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் எவ்வாறிருக்கப் போகின்றன என்பது இதுவரை வெளிப்படவில்லை. ஈழத் தமிழர்கள் மீது நல்லெண்ணத்தில் இந்தியா எந்தவொரு செயற்திட்டத்தையும் செய்யாது என்பது கடந்தகால வரலாறுகளில் இருந்து கற்றுக்கொண்ட விடயம். எனவே தமிழர்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் நேரடியாகவே யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்தியத் துணைத்தூதரகத்தைக் குற்றஞ் சாட்டியியிருக்கிறார். இந்தியாவிற்கு எதிரான கருத்துகள் உதயன் நாளிதழில் வரக்கூடாது என்று இந்தியத் துணைத்தூதர் மிரட்டும் தொனியில் நடப்பதாகக் குற்றஞ் சாட்டியிருக்கிறார். இதற்கு இன்னமும் இந்தியத் தூதரகம் பதிலளிக்கவில்லை.
எந்தவொரு இந்திய அதிகாரிகளையும் இந்தியச் சாமியார்களையும் நம்பாதீர்கள்!
விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட எல்லாக் கட்டமைப்புகளையும் சிதைத்து, மக்களிடம் இருக்கும் தமிழ்த்தேசிய விடுதலை உணர்வை அழிக்க வேண்டும் என்ற இந்திய சிறிலங்கா நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்திய உளவுப்பிரிவுகள் வேலை செய்கின்றன.
“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் செய்ய முடியாததைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்துவிடுவார்” என்பது போலான பரப்புரைக்கு இந்திய உளவுப் பிரிவு பல வழிகளிலும் உதவிகள் செய்து வருகிறது. புலம்பெயர்ந்த அமைப்புகள் பல இன்று இந்தியாவின் நேரடிக் கண்காணிப்புக்குள் அல்லது அவர்களின் நிகழ்ச்சிநிரலை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான முறையில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்காவிட்டாலும், தமிழர்களின் ஒற்றுமையையும் அதன் வலுவையும் காட்டுவதற்கு இப்போது அரசியலாக எஞ்சிக் கிடப்பது “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு” மாத்திரமே. அதை எப்படியாவது உடைப்பது தான் இன்று சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளிற்கிருக்கும் இறுதி வேலைத்திட்டம்.
இந்தியாவின் எந்தவொரு அதிகாரியாக இருந்தாலும் சரி சாமியார் அமைப்புகளாக இருந்தாலும் சரி வணிக நிறுவனங்களாக இருந்தாலும் சரி ஈழத்தில் அவர்கள் எது செய்தாலும் அதன் பின்னணி இந்திய உளவு அமைப்புத்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆதவன்
07-05-2017
Be the first to comment