
நிராஜ் டேவிட் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் லிபரா போன்ற பெரும் வணிக முதலாளிகளின் தாளத்திற்கேற்றாற் போல் அவர்களின் விளம்பர நலன்கட்காகத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இழுக்கான சர்ச்சைகளுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் இழிவான சோரம்போதலைத் தமிழ்ச் சமூகம் வேடிக்கை பார்க்க முடியாது. நிராஜ் டேவிட் வணிக முதலாளிகளின் தேவைகளுக்கேற்பத் தலைப்புகளைக் கட்டமைத்துச் சோரம் போகும் பிழையான எடுத்துக்காட்டை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வதை ஏற்க முடியாது.
கட்டுரைக்குப் போக முன்பு ஐபிசி நாளிதளில் நிராஜ் டேவிட் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கத்தைப் பார்ப்போம்.
“South Asia Terrorism Portal” என்ற அமைப்பு வெயியிட்ட தகவலின் அடிப்படையில் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலில் பங்குபற்றிய இஸ்லாமியரான “ரம்சியூசப்” இற்குப் போலிக் கடவுச்சீட்டைத் தயாரித்துக் கொடுத்தவர் ஒரு ஈழத் தமிழரே. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் பகுதி நேரப் பணியாளராகக் கடமையாற்றியுள்ளார். எனவே இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகள் காரணமாக இருக்கலாம் என்று South Asia Terrorism Porடல் பரப்புரை செய்து வருகிறது.
எப்போதெல்லாம் விடுதலைப்புலிகளின் தடையை நீக்க வேண்டும் என்று விவாதங்கள் எழுகின்றனவோ அப்போதெல்லாம் “ரம்சியூசப்” இன் போலிக் கடவுச்சீட்டு விவகாரம் பேசப்படுகிறது. எனவே புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தபடி சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை தொடர்பில் இருந்து துண்டிக்காமல் விடுதலைப்புலிகளின் பெயரில் இராசதந்திர முயற்சி செய்தால் அது பலனளிக்காமல் தொடர்ச்சியாக அரசியல் அடிப்படையிலான தேக்க நிலையே ஏற்படும்.”

என்று தனது கட்டுரையில் நிராஜ் டேவிட் குறிப்பிட்டுள்ளார். தவிர, விடுதலைப்புலிகள் மீதான தடையைத் தொடர்வதற்கு சிறிலங்கா மற்றும் பன்னாட்டுப் புலனாய்வு அமைப்புகளால் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் என்று குறிப்பிட்டும் சில குற்றச்சாட்டுக்களைப் பட்டியற்படுத்தியிருக்கிறார்.
தமிழீழ விடுதலையை விரும்பாதவர்கள் எப்படிச் செயற்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட நிராஜ் டேவிட் விரும்பியிருந்தாலும் கட்டுரைக்கு இடப்பட்ட தலைப்பானது வணிக நோக்கமுடையது. இந்த வணிக நோக்கத்திற்கு பின்னால் ஐபிசி குழுமத்தின் வர்த்தக நோக்கம் முதன்மையான காரணியாக இருக்கலாம். ஐபிசி செய்தி நிறுவனமானது லிபரா முதலாளிகளால் பல இலட்சக்கணக்கான யூரோக்களைக் கொட்டி இயங்கிவரும் வர்த்தக நிறுவனமே. அந்த வர்த்தக நிறுவனமானது தன் மீது தானே சர்ச்சைகளை உருவாக்கித் தன்னைப் பற்றி எப்போதும் சமூகம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும் சாதாரண வணிக நிறுவனமே.
சிங்கள அரசின் முதன்மையான வெளியுறவுக் கொள்கை வகுப்பாளராகவும், “South Asia Terrorism Portal” அமைப்பின் முதன்மையாளராகவும் இருக்கும் “ரொஹான் குணரட்ண” என்ற மோசமான தமிழின விரோதியின் சூழ்ச்சியை முறியடிக்கப் புலம்பெயர் அமைப்புக்களைச் சீர்செய்து செயற்படும் படி கோரிக்கை விட வேண்டிய கட்டுரைக்கு, தொடர்பேயில்லாமல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஐயுறவுக்குட்படுத்தும் வகையில் பரபரப்பான தலைப்பை இட்டு விளம்பரப்படுத்த நினைத்த ஜபிசி நிறுவனமானது தனது இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் ஊடகங்களை வைத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமந்துவதே ரொஹான் குணரட்ணவின் திட்டம். அப்படிப் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் ஊடகங்களில் வெளிவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சிதைக்கும் நோக்கத்திலான எந்தவொரு கருத்துகளாக இருந்தாலும் அந்தக் கட்டங்களை வெட்டியெடுத்து ஆவணப்படுத்தி, அதனைப் பரப்புரை செய்து வருகிறது சிறிலங்காப் புலனாய்வுத்துறை. அதாவது “புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வலுவாக எதிர்க்கிறார்கள் ” என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த நினைக்கிறது சிறிலங்கா அரசு.
ஏற்கனவே இலக்கியவாதிகள் என்ற போர்வையில் சிறிலங்காப் புலனாய்வுத்துறையால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் புலிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தலைப்புகளை இட்டு ஆக்கங்களை வெளியிட்டு வருகிறார்கள். சமூகவலைத் தளங்களில் கூட “புலிகளிடத்தில் அவருக்கிருந்த செல்வாக்கால் தான் குற்றம் செய்தும் தண்டனையில் இருந்து தப்பினார்” என்ற தொனிப்பொருளில் சிலரைச் சுட்டிக்காட்டிப் பதிவுகள் போடப்படுவதைக் காணலாம். புலிகள் எப்போதும் தண்டனை வழங்குவதில் செல்வாக்கை ஆளுகைசெய்ய இடங்கொடுப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்படியான வதந்திகளைப் பரப்புவதன் மூலம் அதனால் ஏற்படும் தாக்கத்தை ஆவணப்படுத்தி, அதைத் தனது பரப்புரைக்குப் பயன்படுத்துகிறான் எதிரி.
ஐபிசி நிறுவனம் வெளியிட்ட கட்டுரைத் தலைப்பானது கட்டமாக வெட்டப்பட்டு அதைப்பற்றிய சிறு குறிப்பெழுதப்பட்டு உலக நாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பப்படலாம். புலம்பெயர் நாடுகளில் புகழ்பெற்ற தமிழ் ஊடகமொன்று கூட புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறது என்று அதற்குப் பொருள் கற்பிக்கப்படலாம்.
எதிரி செயற்படும் விதத்தையும் எதிரியின் நோக்கத்தையும் எல்லாத் தமிழர்களும் புரிந்து செயற்பட வேண்டும். தமது விளம்பரங்களுக்காக தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்துச் சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமான அடிப்படையற்ற கருத்துக்களை வெளியிட்டமை என்பது எதிரியின் நிகழச்சிநிரலுக்கு உட்பட்டதென்றே கருத வேண்டியிருக்கிறது.
விடுதலைப் போட்டங்கள் மீது அடிப்படையற்ற சர்ச்சைகளை உருவாக்கிப் போராட்டத்தின் நோக்கத்தைச் சிதைத்து, பன்னாட்டு உறவு நிலையில் இருந்து அப்புறப்படுத்தும் செயற்பாடானது பல விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராக இஸ்ரேலிய மற்றும் இந்திய உளவு அமைப்புகளால் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற உத்தியாகும். மியன்மாரில் தேசிய இனங்களுக்கிடையில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் தோல்வியுற்ற பின்னர், அந்த விடுதலைப் போராட்டச் சிந்தையை அழிக்கும் வேலைக்கு மேற்கூறப்பட்ட உத்தியை இந்திய உளவுத்துறையான “ரோ” பயன்படுத்தி வெற்றி கண்டது.
ஐபிசி மாத்திரமல்ல தத்தமது விளம்பரங்களுக்காகவும், வணிக விளம்பரங்களுக்காகவும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அடிப்படைக் காரணமற்றுச் சர்ச்சைகளை உருவாக்கும் விதத்தில் கருத்துகளைப் பரப்புவதானது எதிரியின் நிகழ்ச்சிநிரலுக்குள் வந்துவிட்டதன் விளைவாகவே கருதப்பட வேண்டும்.
ஆதவன்
04 – 06 -2017
Be the first to comment